School Morning Prayer Activities - 28.03.2024

naveen

Moderator


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.03.2024





திருக்குறள்


பால் : பொருட்பால். இயல்: அரசியல்.

அதிகாரம்: இறைமாட்சி.



குறள்:386



காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்.



விளக்கம்:



காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.



பழமொழி :

Silence gives consent



மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி



இரண்டொழுக்க பண்புகள் :



1.முயற்சியும், தொடர் பயிற்சியும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.



2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்து படிப்பேன்



பொன்மொழி :



அறிவற்ற சிநேகிதனிடம் சேர்வதை விட புத்தி சாலியான எதிரியிடம் சேர்வது மேல்.

- பெர்னாட்ஷா.



பொது அறிவு :



1. தனது உடம்பினை விட நீளம் கூடிய நாக்கை கொண்ட விலங்கு எது?



விடை: பச்சோந்தி



2. ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டும் பரவலாக வாழும் விலங்கு எது?



விடை: வரிக்குதிரை



English words & meanings :



Brittle - breakable;உடையக்கூடிய

Baffle - Astound;குழப்பம்



ஆரோக்ய வாழ்வு :



புளுச்சை கீரை : இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது பசி உணர்வை குறைத்து நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும்.



மார்ச் 28 இன்று



மாக்சிம் கார்க்கி அவர்களின் பிறந்தநாள்




மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.[1] இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.



எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார். கார்க்கி என்ற சொல்லுக்கு கசப்பு என்பது பொருள்[4]



1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் 'ஆப்பிள்டன்' இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுவதும் வெளிவந்தன. இந்நூல் முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.



பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.



பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த தாய் (புதினம்) ’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.



நீதிக்கதை



குணம் கெட்ட கொக்கு




ஒரு பெரிய குளத்தில் நிறைய மீன்கள் இருந்தது. அவைகளுடன் பெரிய நண்டு ஒன்றும் இருந்தது. வேறு பெரிய கொக்கு ஒன்றும் இருந்தது. இவைகள் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. ஒன்றுக்கொன்று உதவி வந்தன.



ஒரு கடுங்கோடையில் அக்குளத்தில் நீர் வற்றியது. மீன்களும் நண்டும் அங்கிருக்க முடியாமல் தவித்தன. இதைக் கண்ட கொக்கு அவைகளுக்கு உதவி புரிவதாகச் சொல்லிற்று.



தனது அலகால் ஒவ்வொரு மீனாக கவ்விச் சென்று வேறு நீர் உள்ள குளத்திற்கு எடுத்துச் செல்வதாகச் சொல்லிற்று. அம்மாதிரி ஒவ்வொன்றாகக் கவ்விச் சென்றது. ஆனால் அவைகளை வேறு குளத்திற்கு எடுத்துச் செல்லாமல் ஒரு பாறையின்மேல் வைத்துக் கொன்று தின்று வந்தது.



இவ்வாறு எல்லா மீன்களையும் கவ்வி எடுத்துச் சென்று கொன்று தின்றது.



நீர் வற்றின குளத்தில் கடைசியில் நண்டு மாத்திரம் இருந்தது. கொக்கிடம் நண்டு தன்னையும் காப்பாற்றுமாறு கூறியது. நண்டையும் வேறு குளத்திற்கு எடுத்து செல்ல கொக்கு சம்மதித்தது. உடனே நண்டு கொக்கின் கழுத்தின் மேல் கவ்விப் பிடித்துக் கொண்டது. கொக்கும் பறந்து சென்றது.



பாறையின் அருகே வரும் போது நண்டு கீழே பாறையிலிருந்த மீன்களின் செதில்களைக் கண்டது. அதற்குக் கொக்கின் தீச்செயல் விளங்கிற்று. உடனே சிறிதும் தாமதியாமல் தனது கால்களால் கொக்கின் கழுத்தை அழுத்தி இறுக்கியது. கொக்கும் மூச்சுத் திணறி கீழே விழுந்து இறந்தது. நண்டும் தப்பிச் சென்றது.



இன்றைய செய்திகள் - 28.03.2024


*சாலை நடுவில் மிளிரும் ' மெதுவாக செல்லுங்கள்' வாசகம்; இரவு நேரங்களில் விபத்து தடுக்க நடவடிக்கை.

*முதல் முறையாக ஓட்டு போடுபவர்களுக்கு பரிசு அறிவித்த வேலூர் கலெக்டர்.

*தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் அளிக்கலாம்.

*மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீர் திறப்பு.

*மியாமி ஓபன் டென்னிஸ்: ரோகன்
போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* 'Go Slow' reflective light studs in the middle of the road; a preventative measure to avoid accidents at night.

* Vellore Collector announces a prize for the voters for the first time regarding elections.

*Election-related complaints can be lodged at the number 1950.

* 200 cubic feet of water per second is Released from the Mettur dam for drinking water requirement.

*Miami Open Tennis: Rogan
Bopanna pair advance to semi-finals.
Prepared by

Covai women ICT_போதிமரம்
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock