School Morning Prayer Activities - 22.04.2024

naveen

Moderator


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.04.2024





திருக்குறள்


பால் : பொருட்பால்



இயல்: அரணியல்



அதிகாரம்: நாடு



குறள் எண் : 734



குறள்:

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு.



பொருள்:

மிகுந்த பசியும், நீங்காத நோயும், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகையும் இல்லாத நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.



பழமொழி :

Sweet are the uses of adversity



வறுமை வாழும் முறையைக் கற்றுக் கொடுக்கிறது



இரண்டொழுக்க பண்புகள் :



1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.



2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.



பொன்மொழி :



பொருள் இல்லாதவன் ஏழையல்ல. எப்போதும் மனதில் ஆசையைச் சுமந்து திரிபவனே ஏழை.___ நபிகள் நாயகம்



பொது அறிவு :



1. திரவத்தங்கம் என்று அழைக்கப்படுவது எது?



விடை: பெட்ரோலியம்



2. “தமிழ் மொழி” என்பது?



விடை: இரு பெயரொட்டுப் பண்புத்தொகை



English words & meanings :



minuscule - extremely small, மிகமிகச் சிறிதான,



microcosm-a small model of some thing large, நுண்ணிய மாதிரி



ஆரோக்ய வாழ்வு :



நுங்கு பயன்கள் :நுங்கில், வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடல்வெப்பத்தை தணிக்கக் கூடியது. வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக்கூடியது.



ஏப்ரல் 22 இன்று



புவி நாள்




புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.

1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.



அதேசமயத்தில், ஐக்கியஅமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.



அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் (புவி [பூமி] நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.



நீதிக்கதை



அரசன் கண்ட கனவு




ஒரு அரசனுக்கு அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கைவாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது. இதனால் காலையில் பீதியுடன் எழுந்த அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒருநாடி ஜோதிடரை வரவழைத்தான்.



அந்த நாடிஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கைவாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள் என்று பலன் சொன்னார். உடனே அந்த அரசன் மிகவும் கோபமுற்று, இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்! என்று உத்தரவிட்டான். அதன் பிறகும் மன்னனின் மனம் சமாதானமடையவில்லை.



இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன் பொக்கைவாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினான். அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார். அவரும் அதைப்பார்த்துவிட்டு, மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம் விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள் என்று பலன் கூறினார்.



இதனால் மனம் குளிர்ந்த அரசன், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தான். இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள். அதே விஷயத்தைதான் சொன்னார்கள். ஒருவர் எல்லோரும் இறந்து விடுவார்கள் என்றார். இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார். அவ்வளவுதான் வித்தியாசம்.



நீதி :

பேசும் வார்த்தைகளை கவனமுடன் கையாண்டால் வாழ்வில் ஜெயிக்கலாம்



இன்றைய செய்திகள் - 22.04.2024



*பாராளுமன்ற தேர்தல்:

தமிழகத்தில் ஆண்களை விட அதிகமாக வாக்களித்து அசத்திய பெண்கள்.



*கர்நாடக மாநிலம், உத்தரகனடா மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 6 பேரும், ஹூப்ளி நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.



*ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்த அமெரிக்கா: இஸ்ரேல் பிரதமர், உக்ரைன் அதிபர் வரவேற்பு.



*மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 23-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு.



*பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகத்.



Today's Headlines



*Parliamentary Elections:

Women vote more than men in Tamil Nadu.



*6 people have drowned in the river in Uttarakhand district of Karnataka state. All the 6 deceased belonged to the same family from Hubli.



*US approves military aid: Israel PM, Ukraine president welcome.



*Chance of rain in Western Ghats districts till 23rd.



*Vinesh Phogat qualified for Paris Olympics.



Prepared by

Covai women ICT_போதிமரம்
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock