School Morning Prayer Activities - 21.02.2024

naveen

Moderator


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.02.2024





திருக்குறள்


பால் : அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : அவா அறுத்தல்



குறள்:361



அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

தவாஅப் பிறப்பீனும் வித்து.



விளக்கம்:



எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.



பழமொழி :

No man can serve two masters



ஆற்றிலே ஒருகால் ; சேற்றிலே ஒரு கால் வைக்காதே



இரண்டொழுக்க பண்புகள் :



1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.



2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி



பொன்மொழி :



மற்றவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்த முயற்சிப்பதே மிகவும் மதிப்புமிக்க விடயம். --ராபர்ட் பேடன் பவல்



பொது அறிவு :



1. ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டும் பரவலாக வாழும் விலங்கு எது?



விடை: வரிக்குதிரை



2. இரண்டு இரைப்பைகளைக் கொண்ட பிராணி எது?



விடை: தேனீ



English words & meanings :



dinghy (n)- an open rowing boat சிறிய திறந்த படகு. divinity (n)- God, தெய்வீகத் தன்மை



ஆரோக்ய வாழ்வு :



கானாவாழை:


எந்தவித கிருமிகளையும் அண்டவிடாமல் பாதுகாக்கிறது இந்த கீரை.. அதுமட்டுமல்ல காய்ச்சல் என்றாலே இந்த கீரையைதான் பயன்படுத்துவார்களாம்.. ஒரு கைப்பிடி இலைகளுடன், 10 மிளகு சேர்த்து கொதிக்க வைத்து, பனைவெல்லம் கலந்து குடித்தாலே காய்ச்சல் பறந்துவிடுமாம்.



பிப்ரவரி 21 இன்று



பன்னாட்டுத் தாய்மொழி நாள்




பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Day) பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) 1999, பெப்ரவரி 21 அன்று பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்நாளை யுனெஸ்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 2013 ஆம் ஆண்டின் அனைத்துலகத் தாய்மொழி நாளை ஒட்டி யுனெஸ்கோ பாரிசில் "தாய்மொழிகளும் நூல்களும் - எண்ணிம நூல்களும் பாடநூல்களும்" (“Mother tongues and books - including digital books and textbooks”) என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.



நீதிக்கதை



பூசணிக்காயும் வேப்பங்காயும்




தெருவழியாக ஒருவன் நடந்து கொண்டிருந் தான். இரு புறமும் வளர்ந்திருந்த செடி கொடிகளைப் பார்த்துக் கொண்டே சென்றான். ஓரிடத்தில் பூசணிக் கொடி படர்ந்திருந்தது. அக் கொடியில் மிகப் பெரியதாக பூசணிக்காய் காய்த்திருந்ததைப் பார்த்ததும் அவனுக்குக் கோபம் ஏற்பட்டது.



"கடவுள் இரக்கமே இல்லாதவர். பூசணிக் கொடி எவ்வளவு மெல்லியதாக இருக்கிறது. இந்த மெல்லிய கொடியில் மிகவும் பாரமான காயைத் தோற்றுவித்திருக்கும் கடவுளுக்குக் கொஞ்சமும் கருணையே இல்லை" என்று எண்ணிக் கொண்டே நடந்து சென்றான்.



வழியில் சாலையோரத்தில் மிகப் பெரிய வேப்பமரம் நின்றிருந்ததைக் கண்டான். சற்று நேரம் அதன் நிழலிலே நிற்கலாம் என்ற எண்ணத்துடன் நின்றான். அவ்வாறு நிற்கும்போது மேலே அண்ணாந்து நோக்கினான். கிளைகள் படர்ந்து நின்ற வேப்ப மரத்தில் கொத்துக் கொத்தாக வேப்பங்காய்கள் இருந்ததைக் கண்டான்.



'அடிமரம் பிரம்மாண்டமாகவும் நாலா புறமும் கிளைகள் படர்ந்தும் இருக்கின்ற இந்த வேப்ப மரத்தில் இத்தனை சிறிய காய்களா? நிச்சயம்

கடவுள் புத்தியில்லாதவர்தான்" என்று எண்ணினான். அப்போது காற்று வீசியது. கிளைகள் காற்றில் ஆடி அசைந்தன. அவன் மேலே நிமிர்ந்து பார்த்தபோது. ஒரு வேப்பங்காய் அவனுடைய நெற்றியில் விழுந்தது. உயரத்திலிருந்து விழுந்ததாலும் காய் சிறியதாக இருந்ததாலும் லேசாக வலித்தது.



அப்போதுதான் அவன் கடவுளின் படைப்பின் ரகசியத்தை உணர்ந்து வியந்தான்.



"ஆகா, பூசணிக்காய், கொடியில் இருப்பது போல, இந்த மரத்தில் காய்த்து, அது எவர் மேலாவது விழுந்தால் என்ன ஆகும்? கடவுள் அதிபுத்திசாலி என்பதில் சந்தேகமே இல்லை. எது எது எங்கு எங்கு இருக்க வேண்டுமோ அதை அங்கே அங்கே அவ்வாறே படைத்திருக்கிறார். அதை உணராத நான்தான் அறிவிலி” என்று அவன் கூறிக்கொண்டே நடந்தான்.



இன்றைய செய்திகள் 21.02.2024



* துவரை, எள், சூரிய காந்தி உள்ளிட்ட வேளாண் பயிர்களின் பரப்பு விரிவாக்கத்திற்காக 108 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.



* நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24-ந்தேதி திறந்து வைக்கிறார்.



* ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை எனில் ரூ.10,000 அபராதம்: அரியானா அரசு அறிவிப்பு.



*கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலை எச்சரிக்கை- பள்ளிகளில் 'வாட்டர் பெல்' முறை அமலானது.



* ரஞ்சி டிராபி; தமிழ்நாடு உட்பட காலிறுதிக்கு தகுதிபெற்ற 8 அணிகள்...போட்டி அட்டவணை வெளியிட்டது பி.சி.சி.ஐ.



Today's Headlines:



* Minister of Agriculture MRK Panneerselvam said that 108 crore rupees will be allocated for the expansion of the area of agricultural crops including Thuvari, Sesame and Sunflower.



* 2nd seawater desalination plant at Nemmeli: Chief Minister M.K.Stalin will open it on 24th.



* If the vehicles are not giving way to ambulance Rs 10,000 will be collected as fine –Hariana government.



*High temperature alert for 6 districts in Kerala- 'Water bell' system implemented in schools.



* Ranji Trophy; 8 teams qualified for the quarter finals including Tamil Nadu. BCCI released the schedule.



Prepared by

Covai women ICT_போதிமரம்
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock