School Morning Prayer Activities - 18.10.2024

naveen

Moderator


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.10.2024



திருக்குறள்

பால் : பொருட்பால்

அதிகாரம்: பழைமை

குறள் எண்:804



விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையால்

கேளாது நட்டார் செயின்.



பொருள்:உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச்செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.



பழமொழி :

A good beginning is half the battle.



நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்குச் சமம்.



இரண்டொழுக்க பண்புகள் :



* எண்ணம் போல் வாழ்க்கை என்பர் பெரியோர். எனவே நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு சிறப்பாக வாழ்வேன்.



* பள்ளியிலிருந்து வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றால், பயப்படாமல் பங்கேற்று வெற்றி பெறுவேன்.



பொன்மொழி :



உங்களின் உழைப்பை 80 சதவிகிதம் திட்டமிடவும், 20 சதவிகிதம் திட்டமிட்டப்படி செயல்படுத்தவும் தொடங்கினால் நீங்கள் நிச்சயம் வெற்றியாளார் தான்.----ஆப்ரகாம் லிங்கன்



பொது அறிவு :



1. கருவளர்ச்சியில் முதலில் தோன்றும் உறுப்பு எது?



விடை: இதயம்



2. ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு?



விடை: 1870



English words & meanings :



Stove-அடுப்பு,Strainer-வடிகட்டி



அக்டோபர் 18 இன்று



சார்ல்ஸ் பாபேஜ் அவர்களின் நினைவுநாள்




சார்ல்ஸ் பாபேஜ் அல்லது சார்லஸ் பாபேஜ் (Charles Babbage, டிசம்பர் 26, 1791 - அக்டோபர் 18, 1871) பிரித்தானிய பல்துறையறிஞர் . இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றார். இவர் கணிதத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர், பகுப்பாய்வுத் தத்துவவாதி, இயந்திரப் பொறியாளர் என்று பல பரிமாணங்கள் கொண்டவர். வித்தியாச பொறி 1882ல் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது.இதுவே இண்றைய கணினியின் அடிப்படைத் தத்துவம். இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திரக் கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்.1991 இல் பிரித்தானிய விஞ்ஞானிகள் இவர் திட்டமிட்டபடி வித்தியாசப் பொறியினை (difference engine) வடிவமைத்தனர். அது சரியாக இயங்கியமை இவரது திறமையை நிரூபித்தது.



தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் நினைவுநாள்



தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) பிப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931 . ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.



நீதிக்கதை

ஊக்கமது கைவிடேல்




மருங்கூர் என்னும் ஊரில் மாதவன் என்ற மரம் ஏறும் தொழிலாளி வாழ்ந்து வந்தார்.



சுற்றுவட்டார கிராமங்களில் தென்னந்தோப்பில் தேங்காய்களை பறித்துக் கொடுத்து, அதில் கிடைக்கின்ற வருமானத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை ஏழ்மையில்லாதவாறு நடத்தி வந்தார் மாதவன்.



ஒரு சமயம் தேங்காய்களை அறுக்கின்ற காலத்தில் மாதவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது. தென்னந்தோப்புக்காரர்கள் எல்லோரும் மாதவனை வரும்படி அழைத்து, தேங்காய்கள் அறுப்பதற்கு நாள் குறித்துவிட்டார்கள்.



மாதவனுக்கு மகேந்திரன் என்ற மகன் இருந்தான். பத்து வயது கூட நிரம்பாத சிறுவன் மகேந்திரன் படிப்பிலும், பேச்சு சாதுர்யத்திலும் படு சுட்டியாக இருந்தான் .



சிறு வயதிலேயே நல்ல பழக்கவழக்கங்கள் அவனிடம் நிறைய காணப்பட்டன. மகேந்திரனால் தன் தந்தைப்படுகின்ற வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.



அதே நேரம் தேங்காய்களைப் பறிப்பதற்காக, தன் தந்தை ஒத்துக்கொண்ட வேலையையும் செய்ய முடியாமல், மனக்கஷ்டப் படுவதை நினைத்து ஒரு முடிவுக்கு வந்தவனாய் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டான்.



தோப்புக்காரர்கள் எல்லோரும் மாதவனின் வருகையை ஆவலோடு எதிர் பார்த்திருந்தார்கள். ஆனால் மாதவனின் மகன் மகேந்திரன் வருவது அவர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது.



தோப்புக்காரர்களை நெருங்கிய மகேந்திரன் “ஐயா! எல்லோரும் மன்னிக்க வேண்டும். இன்று என் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், அவரால் குறிப்பிட்ட நாளில் தேங்காய் அறுப்பதற்கு வர முடியவில்லை.



அதனால் அவர் செய்கின்ற வேலையை நானே செய்வதாக முடிவெடுத்து வந்துள்ளேன்” என்றான். அதனைக் கேட்ட தோப்புக்காரர்கள் ஆச்சர்ய மடைந்தனர்.



“சிறுவனே! உன்னால் எப்படி உயரமான தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களைப் பறிக்க முடியும்? என்று கேட்டனர்.



உடனே மகேந்திரன் “ஐயா! நீங்கள் இப்படிச் சொல்வீர்கள் என்று தான் நானும் எதிர்பார்த்தேன். ஆனால், என் தந்தையின் உடல்நிலையோ மிகவும் மோசமாக உள்ளது. மருத்துவரிடம் செல்லவே பணம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.



அதனால் நான் மரம் ஏறி தேங்காய்களை அறுத்துத் தருகிறேன்” என்று கூறியபடி கொண்டு வந்த வெட்டரிவாளினை இடையில் சொருகிக் கொண்டு வேகமாகத் தென்னை மரத்தின் மீது ஏறத் தொடங்கினான் மகேந்திரன்.



சிறுவயதிலேயே மரம் ஏறுவதில் தன் தந்தையுடன் பயிற்சி செய்தது சரியான நேரத்தில் உதவி செய்கிறதே! என்று மனதுள் நினைத்தபடியே மர உச்சிக்கு சென்று விட்டான் மகேந்திரன்.



தோப்புக்காரர்கள் எல்லோரும் மகேந்திரனை வியப்புடன் பார்த்து அவனின் வீரத்தைப் பாராட்டினார்கள். மகேந்திரன் தன் கடமையையே கருத்தில் கொண்டவனாக அரிவாளினால் தேங்காய்களை அறுக்கத் தொடங்கினான்.



பின்னர் மரத்தைவிட்டு கீழிறங்கி அடுத்த மரத்தில் ஏறத் தொடங்கினான். தன் தந்தையைப் போலவே, நன்கு விளைந்த தேங்காய்களை எல்லாம் இனம் கண்டுபிடித்து குறிப்பிட்ட நேரத்திற்குள் அறுத்து முடித்து விட்டான்.



அந்த தோப்புக்காரரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, அருகிலிருக்கும் மற்றொரு தென்னந்தோப்புக்குள் நுழைந்து தேங்காய்களை அறுக்கலானான் தனது தந்தையார் ஒத்துக்கொண்ட எல்லாத் தோப்புக்காரர்களின் தோப்புகளிலும் மரம் ஏறி தேங்காய்களை அறுத்துக் கொடுத்து பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டையடைந்தான் மகேந்திரன்.



தான் வாங்கி வந்த பணத்தையெல்லாம் தந்தையிடம் கொடுத்து, தான் செய்து வந்த வேலைகளைப் பற்றிக் கூறினான் . மாதவன் அதனைக்கேட்டு வியப்பில் ஆழ்ந்தார்.



பயமில்லாமல் உயரமான மரங்களில் ஏறி எப்படி நீ தேங்காய்களை அறுத்தாய்? என்று மகேந்திரனிடம் ஆச்சர்யத்துடன் கேட்டார்.



அதற்கு மகேந்திரன் “அப்பா! தன்னம்பிக்கையும் , உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமும், விடா முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் என்ற மனத்துணிவும் தான் இக்காரியத்தில் எனக்கு வெற்றியைத் தேடி தந்தது.



இனிமேல் நீங்கள் கவலையுடன் நோயினால் படுத்திருக்க வேண்டாம். இப்போதே வைத்தியர்



வீட்டிற்குச் செல்லலாம்," என்று கூறினான்.



மாதவனோ தன் மகனை அன்போடு தழுவிக் கொண்டார்.



நீதி:மன உறுதியை இழந்து விடாமல் துணிவோடு செயல்களை செய்ய வேண்டும்.



இன்றைய செய்திகள் - 18.10.2024



* தமிழகம் முழுவதும் கனமழையால் 891 குளங்கள் நிரம்பின: 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் 60 சதவீதம் நீர்இருப்பு.



* தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த மழையில், 200-க்கும்மேற்பட்ட பாம்புகள் தீயணைப்பு துறையினர் மற்றும் பாம்பு பிடிப்பவர்களால் பிடிக்கப்பட்டன.



* ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பு 120 நாளில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட உள்ளது. இது வரும் நவ.1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.



* 12 அணிகள் பங்கேற்கும் 'புரோ கபடி லீக்' நாளை தொடக்கம்.



* டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை; ஹாரி புரூக் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்.



Today's Headlines



* Heavy rain across Tamil Nadu filled 891 ponds: 90 dams and reservoirs have 60 per cent capacity of water.



* Over 200 snakes were caught by the fire department and snake catchers, in the rain that fell across Tamil Nadu yesterday.



* The time limit for booking train tickets will be reduced from 120 days to 60 days. Indian Railways has said that this will come into effect from November 1.



* 'Pro Kabaddi League' will start tomorrow with 12 teams in participation.



* Test Cricket Rankings; Harry Brooke advances to 2nd place.

Prepared by



Covai women ICT_போதிமரம்
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock