வெற்று முழக்கமாகும் அனைவருக்கும் கல்வி!

naveen

Moderator
குழந்தையின் அடிப்படை பிறப்புரிமை கல்வி கற்பதாகும். மனித சமுதாயத்தில் கல்வி கற்பதன் அவசியமானது தொன்றுத் தொட்டு வலியுறுத்தப்பட்டே வந்துள்ளது. ஏனெனில் மனித நடத்தைகள் கல்வியால் மட்டுமே மாற்றமடைகின்றன. அத்தகைய கல்வியினை எப்பாடுபட்டாவது கற்கத் தலைப்பட வேண்டுமென்பதே ஆன்றோர் பலரது சீரிய வாக்காகும். கல்வி ஒன்றே சமுதாயத்தில் விரும்பத்தக்க விளைவுகளை உண்டாக்கவல்லது. மனிதவளம் அதனால் மேம்பாடு அடைந்து நாடு நல்வழியில் உலக அரங்கில் பீடுநடை போடவும் ஏதுவாகிறது. தவிர, ஒரு நாட்டின் வளர்ச்சியென்பது மனித அறிவு வளர்ச்சியோடு நேரடித் தொடர்புடையது. அத்தகு அறிவு வளர்ச்சிக்கு கல்வி இன்றியமையாதது. மேலும், கல்வி எனப்படுவது மனித வாழ்க்கையில் ஒரு கலங்கரை விளக்கமாக விளங்கி வருகின்றது.
இக்கல்வியானது பண்டைக் காலத் தமிழ்ச் சூழலில் சாதிப்பாகுபாடுகள் மேலோங்கிக் கோலோச்சியிருந்த காலக்கட்டத்தில் உயர்சாதி மேட்டுக்குடியினராக வாழ்ந்தோருக்கு மட்டுமே குருகுலக் கல்வியாக வழங்கப்பட்டு வந்தது. ஏனைய சமூக அடித்தட்டு மக்கள் காலந்தோறும் கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்களாகவே வாழ விதிக்கப்பட்டிருந்தனர். தவிர, அக்காலக் கல்வி ஆசிரியரை மையப்படுத்தியே காணப்பட்டது. நினைவாற்றல் மற்றும் போர்த்திறனை வளர்ப்பதாகவே பெரும்பாலும் அமைந்திருந்தது. மாணாக்கரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஆங்கே இடமில்லை.

ஆங்கிலக் கிழக்கிந்திய மற்றும் காலனியாதிக்கத்தின் போது கிருத்துவ மதத்தைப் பரவலாக்குதல் மற்றும் ஆட்சி நிர்வாகங்களில் கீழ்நிலைப் பணிகளில் உற்றத் துணையாக இருத்தல் பொருட்டு தன்னார்வ கிருத்தவ சமய அமைப்புகளும் ஆங்கிலேய அரசும் மெக்காலே கல்வித் திட்டத்தை உருவாக்கி கல்வியை எல்லோருக்குமாக வழங்க முற்பட்டன. இவை காரணமாக இடைச்சாதியினர் கல்வி விழிப்புணர்வு பெற்றனர். ஆனாலும், பட்டியல் இனத்தவரான தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பெண்கள் முதலானோர் புறக்கணிக்கப்பட்ட சமூகமாகவே கருதப்பட்டனர் என்றால் மிகையில்லை.

நாடு விடுதலையடைந்ததற்கு பிறகு, அரசால் பல்வேறு கல்வி நலத் திட்டங்களும் பள்ளிகளும் ஊர்தோறும் தோற்றுவிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்ட போதிலும் அனைவருக்கும் கல்வி என்பதில் ஒருவித தேக்கநிலையே தென்பட்டது. மக்களிடையே நிலவிய ஏழ்மை, வறுமை, அறியாமை, மூடப் பழக்கவழக்கங்கள், பழைமைவாதம் போன்றவற்றாலும் சாதிய மற்றும் பெண்ணடிமைத் தனத்தாலும் ஓர் இரும்புத்திரை சமுதாயத்தில் இருந்து கொண்டேயிருந்தது.

அதன்பிறகு, கோத்தாரி கல்விக் குழு, லெட்சுமண முதலியார் கல்விக்குழு ஆகியோர் தந்த கல்விப் பரிந்துரைகளை ஆராய்ந்து அவற்றை உள்ளடக்கி கி.பி. 198 6 இல் புதிய தேசியக் கல்விக் கொள்கை வரையறுக்கப்பட்டு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. பொதுவான ஒரு கலைத்திட்டம் அதன் வாயிலாக வடிவமைக்கப்பட்டது. அதற்கேற்ப, தொடக்கக்கல்வி நிலையில் நாடு முழுமைக்குமான பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டு பாடநூல்கள் வழங்கப்பட்டன. சமுதாயத்தில் காணப்படும் நலிந்த பிரிவினருக்குப் பல்வேறு சலுகைகள் தரப்பட்டன

அனைவருக்கும் தொடக்கக்கல்வி; எப்போதும் கல்வி; தரமானக் கல்வி என மூன்று முக்கியமான முழக்கங்களை முன்னிறுத்தி ஒரு மாபெரும் இயக்கமாக மக்கள் மத்தியில் வீறு கொண்டெழுந்தது. பள்ளி அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. பாடத்திட்டங்களில் பல புதுமைகள் புகுத்தப்பட்டன. ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்க ஏதுவாக தேசிய மற்றும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டு அவற்றின் வாயிலாக மாவட்டங்கள் தோறும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. எனினும், கல்வியின் மீதான சமூகத்தடைகள் முற்றிலுமாக களையப்படவில்லை. கல்வியால் சமுதாய பலன் அடைந்தவர்கள் மட்டுமே தம்மை வளர்த்துக் கொண்டனர். பள்ளி வயதினர் எப்பள்ளியிலும் சேராமல் கல்லாதவராகவும், பள்ளிகளில் சேர்ந்தவர்கள் குடும்பச் சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் காரணமாக பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விடுபவராகவும் பல்கிப் பெருகி நாட்டிற்கு பெரும் அவமானத்தையும் அறைகூவலையும் தரத் தக்க வகையில் குழந்தைத் தொழிலாளராகவும் குடும்பத்தைப் பேணும் மற்றுமொரு தாய்மாராகவும் உருவாயினர்.

அனைவருக்கும் தொடக்கக்கல்வி எனும் தீர்க்கமான, தீவிரமான உறுதியுடன் செயல்பட்டுவந்த இப்பள்ளிகள் பல்வகைப்பட்ட மக்களின் நன்மதிப்பையிழந்து பொருளாதாரத்தில் மிகவும் பலவீனப்பட்ட மற்றும் உயர் விளிம்புநிலை மக்களது வேறுவழியற்றப் புகலிடங்களாக மாறிப்போயின. வறிய மற்றும் வீடற்ற குடும்பங்களின் குழந்தைகளும் கல்வியின் பெருமையினை இன்றளவும் உணராத அருந்ததியர், பழங்குடியினர், நாடோடி இனத்தவர் முதலானோரின் பிள்ளைகளும் படிப்பை ஒரு பொருட்டாக மதிக்காமலேயே தம் மரபான வாழ்க்கையை மேற்கொள்ளவே முற்பட்டனர். அரசின் அறிவிப்புகளும் அச்சுறுத்தல்களும் விழலுக்கு இறைத்த நீராகவே இருந்தன. ஒரு புறம் தனியார் மயமாக்க வெடிப்புகள் மறுபுறம் அரசுப் பள்ளிச் சீரமைப்புகள் என இவற்றிற்கிடையே அனைவருக்கும் தொடக்கக் கல்வி அகப்பட்டுச் சீரழிந்துக் கொண்டிருந்தது.

வழிகாட்டுகின்றது; நெறிப்படுத்துகின்றது. சுருங்கச் சொன்னால் வேலை வாய்ப்பிற்கானதல்ல கல்வி. கல்வியின் ஓர் அங்கம்தான் வேலைவாய்ப்பு. இதை உணர்ந்து செயல்படுவது அனைவருக்கும் நலம் பயக்கும்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு குடிமகன் மழலைக்கல்வி முதல் உயர் தொழில் கல்வி முடிய தமிழைப் பயிற்றுமொழியாகக் கொள்ளாமல் ஆங்கில வழியில் படித்துப் பட்டம் பெறும் அவலநிலை காணப்படுகின்றது. சமுதாயத்தின் பெருங்கேடாகத் திகழும் மதுபானக் கடைக்குப் படித்த, பட்டதாரிகளைப் பணியிலமர்த்திக் கொண்டு வேலைவாங்கும் அரசு நாடு முன்னேற பேருதவியாற்றும் அறிவு வள முதலீட்டிற்கான கல்வியைத் தனியாரிடம் தாரைவார்த்து வருவது சமுதாய ஏற்புடையதல்ல. முறையான கல்வித் தகுதியோ, குழந்தைகளை நன்முறையில் கையாளும் போதிய குழந்தை உளவியல் பயிற்சியோ இல்லாத குறைந்தக் கூலிக்கு மாரடிக்கும் நபர்களின் கைகளில் இந்தியாவின் எதிர்காலம் அகப்பட்டுக் கொண்டு மிகவும் துன்பப்படுவதை எந்தவொரு அறிவார்ந்த சமுதாயமும் எளிதில் ஏற்றுக் கொள்ளாது. இந்த இழிநிலை உடனடியாக மாற்றம் பெற வேண்டும்.

தோன்றி மறையும் வானவில்லாய் மக்களிடையே விளங்கி வரும். வழி நெடுக காணப்படும் தமிழ்நாடு அரசு நடத்தும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைப் புறக்கணித்து தூரத்துப் பச்சை நோக்கிய தம் பச்சிளம் குழந்தைகளுடனான பல்வேறு கனவுகளுடன் பெருந்தொகையைத் திரட்டி, தோளில் சுமந்து செல்லும் அப்பாவிப் பெற்றோர்களுக்குக் கானல் நீர் ஒருபோதும் தாகம் தணிக்காது என்பதை எப்படி எடுத்துச் சொல்வது?

எழுத்தாளர் மணி கணேசன்
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock