தேசிய விருது பெற்ற ஆசிரியர்களின் ஒன்பது ஆண்டு பட்டியலை சேகரிக்குமாறு, கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வியின் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, ஒருங்கிணைந்த கல்வி திட்ட மாநில இயக்குனர் ஆர்த்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அனைத்து மாவட்டங்களிலும், கடந்த, 2014ம் ஆண்டு முதல், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களின் பெயர் மற்றும் விபரங்களை சேகரித்து, பட்டியலாக அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய அரசின் கல்வித்துறை சார்பில், அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொரு மாநிலத்திலும், 2014ம் ஆண்டு முதல் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களின் விபரங்களை, தரவுகளாக சேகரிப்பதாக கூறப்பட்டுள்ளது.
நல்லாசிரியர் விருது பெற்றவர்களின் வழியே, பாடத்திட்டம், கற்பித்தல் முறை போன்றவற்றில் தரம் உயர்த்தும் பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.