தலைமையாசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

naveen

Moderator
மதுரையில் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வில் பணியிடம் மறைக்கப்பட்டதாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.



மதுரையில் ஒன்றியத்திற்குள் தொடக்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஓ.சி.பி.எம்., பள்ளியில் டி.இ.ஓ., சுப்பாராஜூ தலைமையில் நடந்தது. 33 காலியிடங்களுக்கு விண்ணப்பித்த 38 தலைமையாசிரியர்கள் அழைக்கப்பட்டனர்.



'கலந்தாய்வு துவங்கும் முன்பே காதக்கிணறு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு தலைமையாசிரியை ஒருவருக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது எவ்வாறு சாத்தியம்' என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.



அவர்களுடன் டி.இ.ஓ., சுப்பாராஜூ பேச்சு நடத்தினார். 'இந்த கலந்தாய்வில் யாருக்கும் அதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கவில்லை' என அதிகாரிகள் தரப்பில் மறுக்கப்பட்டது. ஆனால் ஆசிரியர்கள் தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இடங்களை தேர்வு செய்த 15 தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இன்று (ஜூலை 3) ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கான மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.





'மர்மம்' திருமங்கலம்





மதுரை, திருமங்கலம் என 2 மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களில் இக்கலந்தாய்வு துவங்கியுள்ளது. மதுரையில் காலி இடங்கள் வெளிப்படையாக காண்பிக்கப்பட்ட நிலையில் திருமங்கலம் கலந்தாய்வில் வெளிப்படை தன்மை இல்லை என சர்ச்சை எழுந்துள்ளது. நடந்த 'உதவிபெறும் பள்ளிகளின் உபரி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் பணிநிரவல்' கலந்தாய்வில் விதிமீறி சீனியர் ஆசிரியர்கள் மாற்றப்பட்டது உள்ளிட்ட புகார்கள் எழுந்தன.



நேற்று நடந்த தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்விலும் திருமங்கலத்தில் காலி இடங்கள், அழைக்கப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை விவரம், மாறுதல் பெற்றவர்கள் விவரம் என எதுவும் வெளியிடப்படவில்லை. முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.