ஆசிரியர்களின் கற்பித்தல் பணிகளை வெளியாட்கள் ஆய்வு செய்வதா ?

naveen

Moderator
ஆசிரியர் கற்பித்தல் பணிகளை வெளி நபர்களை கொண்டு செய்யப்படும் ஆய்வு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்று டிட்டோஜேக் அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (டிட்டோஜேக்) மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.



இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்: ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமையை ஏற்படுத்துவதுடன், மாணவர்கள் கல்வித் திறனை முற்றிலும் பாதிக்கும் எண்ணும்-எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். இந்த திட்டம் மாணவர்களுக்கு ஏற்ற கல்வித் திட்டம் அல்ல என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தையின்போது தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை பிஎட் படிக்கும் மாணவர்களை கொண்டு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது.



எக்காரணம் கொண்டும் கல்வித்துறை சாராத மூன்றாம் நபர் ஆய்வுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை, அவர்களை பள்ளிகளில் அனுமதிக்க வாய்ப்பில்லை. காலாண்டு விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதை மாற்றி அமைக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும். மேற்கண்ட தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் மீது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் ஆசிரியர்களின் பணி குறையும், கற்பித்தல் பணிகள் தவிர மற்றவற்றில் இருந்து ஆசிரியர்களை முற்றிலுமாக விடுவிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர். மேற்கண்ட தீர்மானங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறைக்கு தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி, டிட்டோஜேக் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock