அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பார்வையில் தமிழக அரசின் பட்ஜெட் ஆதரவும் எதிர்ப்பும் !

naveen

Moderator
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பார்வையில் தமிழக அரசின் பட்ஜெட் ஆதரவும் எதிர்ப்பும் ! தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மீதான கருத்து பதிவுகளாக அகில இந்தியச் செயலாளர் ஐபெட்டோ அண்ணாமலை தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் மா. நம்பிராஜ், பொதுச் செயலாளர் அ. வின்சென்ட் பால்ராஜ், மாநில பொருளாளர் க.சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.



அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், “நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் இன்று சட்ட பேரவையில் தாக்கல் செய்து படித்துள்ளார். அறிஞர் அண்ணா அவர்கள் நிதியமைச்சராக இருந்த பொழுது தாக்கல் செய்த விவரத்தினையும் பதிவு செய்தார்கள்.

64 பக்க அறிக்கையில் மூன்றரை கோடி மக்கள் பயனடையும் வகையில் இடம்பெற்றதாக அறிஞர் அண்ணா சொன்னதாக தெரிவித்த போது நெஞ்சம் நெகிழ்ந்தது. வரவேற்கக் வேண்டிய பொது அம்சங்கள்:

* தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் ( 6 முதல் 12 ஆம் வகுப்பு ) வரைக்கும் படிக்கின்ற மாணவிகளுக்கு புதுமைப் பெண் கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயில்வதற்கு மாதந்தோறும் ரூபாய்1000/- வழங்கப்படும்



*ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ள அறிவிப்பாகும். அரசுப் பள்ளியில் படிக்கும் அக்காவிற்கு சலுகை அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் தங்கைக்கு சலுகைகள் இல்லையா? என்றெல்லாம் எழுதினோம்.



அதே போல் அரசு பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு உதவிடும் பொருட்டு “தமிழ்ப்புதல்வன் ” திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் வழங்கபட இருக்கிறது. சலுகைகள் விரிவுபடுத்தப்பட்டிருப்பதை மனந்திருந்து தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழக நிதி அமைச்சர் அவர்களுக்கும், இந்த நேரத்தில் நன்றி பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.



தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள். அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கின்ற நாளில் போராடி வருகிறார்கள். ஆனால், போராடி வருபவர்களுக்கு ஏதாவது ஒரு அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்று எதிர்பார்த்துதான் இன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை அறிவித்து போராடி வருகிறார்கள். ஆனால், எல்லோரும் எதிர்பார்த்த பழைய ஓய்வூதிய திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்ற கொள்கை முடிவினை கூட ஆளுநர் உரையிலும், இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை என்பது பெருத்த ஏமாற்றத்தினையும் அதிருப்தியையும் அளிக்கிறது.



அதுபோல் நிறுத்தி வைக்கப்பட்ட, முடக்கி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பினுடைய அனுமதியும் தொடரும் என்ற அறிவிப்பாவது வெளிவரும் என்று எதிர்பார்த்தார்கள் அதுவும் வெளிவரவில்லை. மற்றபடி கல்வித்துறை சார்ந்த நிதி ஒதுக்கீட்டில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் 90% *ஆசிரியர்ளை பெரிதும் பாதிக்கு உள்ளாக்கி வரும் அரசாணை எண் 243 ரத்து செய்வது, இடைநிலை ஆசிரியர்களுடைய ஊதிய முரண்பாடான மத்திய அரசுக்கு இணையான ஊதியம் உட்பட அறிக்கைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம்.



நிதி ஒதுக்கீட்டினை பொருத்த வரையில் கடந்த ஆண்டை விட அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு கூடுதலாக செய்துள்ளார்கள். கல்வித்துறையை பொருத்தவரையில் பள்ளிக்கல்வித்துறைக்கு 44000/- கோடி ஒதுக்கியுள்ளார்கள். சென்ற ஆண்டு ரூ40299/- கோடி நிதிநிலை ஒதுக்கி இருந்தார்கள். உயர் கல்வித்துறையை பொறுத்தவரையில் சென்ற ஆண்டு ரூ6967/- கோடி ஒதுக்கி இருந்தார்கள்.





இந்த ஆண்டு ரூ8212/- கோடி ஒதுக்கி உள்ளார்கள். அதேபோல் அனைத்து துறைகளுக்கும் ஒதுக்கி உள்ளார்கள். அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாட்டில் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் அரசு அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் என முடிவு செய்துள்ளார்கள். அதேபோல் ஒரு லட்சம் மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை பெற கல்வி கடன் ரூ2500/-கோடி வழங்குவதாக அறிவித்து உள்ளார்கள். அகில இந்திய அளவில் நிதி ஆயோக் புள்ளி விவரப்படி சுமார் எட்டு கோடி மக்கள் உள்ள தமிழ்நாட்டில் 14 லட்சம் பேர் (2.2%பேர்) வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாக அறிவித்துள்ளார்கள். அதில் 5 லட்சம் பேரை வறுமைக்கோட்டில் இருந்து மீட்கப்படுவார்கள் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.



இரண்டு ஆண்டுகளில் ரூ50000/- இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்து உள்ளார்கள். வரி வருவாயை பொருத்தவரையில்ரூ 1.49 லட்சம் கோடி எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது பற்றாக்குறை ரூ44907/- கோடி.

நிதித்துறை முதன்மை செயலாளரைப் பொறுத்தவரையில் நிதி நிலையை ஆரோக்கியமாக நம்மால் வைத்திருக்க முடியுமென்று உறுதியளித்துள்ளார்.



தேசிய அளவைவிட பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதாக நிதித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார். தடைகளை தாண்டி வளர்ச்சியை நோக்கி என்ற ” லோகோ “வுடன் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது மகிழ்ச்சியை தருகிறது. மேற் சொன்ன பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டுமாய் தமிழக முதலமைச்சர் அவர்களையும், தமிழக நிதியமைச்சர் அவர்களையும் தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பாக பெரிதும் வேண்டி கேட்டு கொள்கிறோம். ” என்பதாக அந்த கூட்டறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.



– அங்குசம் செய்திப் பிரிவு.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock